Tuesday, December 30, 2008

நான் வேண்டும் வரங்கள்

ஜன்னலோர படுக்கை
தினம் தினம் பௌர்ணமி
அதிகாலை பனித்துளி
சாலையோர பூக்கள்
நினைத்தவுடன் மழை
கள்ளமில்லா சிரிப்பு
பொய் இல்ல நட்பு
தினம் நூறு கவிதைகள்
மீண்டும் ஒரு பாரதி
மனிதம் உள்ள மனிதர்கள்
பணம் அல்ல பாசம்
இரவு நேர மெல்லிசை
தோள் சாய தோழன்
தலை கோதக் காதலி
தாய்மடி தூக்கம்
துக்கத்தில் மரணம்

Monday, November 10, 2008

என்னுள் நீ!!!

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
*********************
உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது
உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!
*********************
இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
*********************
ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
*********************
என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!

நாங்கள் ஏழைகள்...?

நாங்கள், வாழ்க்கையை பொழுதுபோக்காய்
வாழ்பவர் மத்தியில், அரை வயிறு கஞ்சிக்காய்
முழு பொழுது உழைப்பவர்கள்

பிறக்கும்போதே ஏழ்மை எனும் தாயால்
தத்தேடுக்கபட்டவர்கள்...

ஒட்டிய வயிறும், உலர்ந்த நெஞ்சும்
எங்களின் அடையாளங்கள்..

வீரணம் நீர் குழாய்களும், கூவம் நதிக்கரையும்
எங்களின் மாட மாளிகைகள்..

குனிந்து குனிந்தே கூனல் விழுந்த எங்கள்
முதுகு தண்டுகளுக்கு, நிமிர்ந்து பார்க்கவும் நேரம் பிடிக்கிறது..

இந்தியா முன்னேற கனவு காணுங்கள் என்று கூறும்
அப்துல் கலாம் அவர்களுக்கு எப்படி சொல்வது
எங்களின் நீண்ட ஆண்டு கனவு "முழு வயிறு காஞ்சி"
தான் என்பதை...

"ஒரு தேர்தலுக்கு ஒரு முறை தான் ஓட்டு போடனுமா?"
கையில் கிடைக்கும் ஐம்பது ரூபாய்க்காய் அலைகிறது மனசு..

இந்த பூமியில் தண்ணீர் உலர்ந்தாலும்
எங்களின் கண்களில் கண்ணீர் குறைந்ததில்லை..

ஆதலால் நாங்கள் ஏழைகள்

Wednesday, November 5, 2008

தமிழே வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

விதையாக விழ வேண்டும்

வாழும் போது மரமாக வாழவேண்டும்
அடுத்தவர்களுக்கு நிழல் தர
வீழும் போது விதையாக விழ வேண்டும்
அடுத்த தலைமுறைக்கு மரமாக!

இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!
அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

நட்பு

நட்பு என்பது தேன்கூடு!
களையாதிருக்கும் வரை..
நட்பு என்பது கண்ணாடி!
உடையாதிருக்கும் வரை..
நட்பு என்பது பூந்தோட்டம்!
வாடாதிருக்கும் வரை..
நட்பு என்பது காற்றாடி!
சுழன்று கொண்டிருக்கும் வரை..
நட்பு என்பது உயிர்நாடி!
நான் உயிரோடிருக்கும் வரை

நேசங்கள் விற்பனைக்கில்லை

ஒரு நிசப்த இரவிவினில்
கண்ணயர்ந்த வேளையிலே.......
மேலிருந்து வானங்கள் திறக்க‌
என் அறை முழுதும்
பணக் கற்றைகளால் நிரம்பியது....

விழிகள் முழுதும் அகல.......
கதவுகள் திறந்து வெளி ஓடினேன்......
மனம் முழுதும் கொள்ளை மகிழ்ச்சியாய்
அந்த பணக் கற்றைகளோடு...........

சில நேரக் களியாட்டங்கள்......
சில நேரப் பொழுதுபோக்குகள்........
சில நேர இன்பங்கள்..........
பாதி பணக் கற்றைகள்
தீர்ந்த பின்னே............
மெல்லமாய் வெறுமையின் பிடிகள்
மனதை இறுக்க‌......,
தனிமைச் சிறகுகள் விரிந்து கொண்டன......

வெறுமையின் பிடிகளை வெட்டித் தள்ள....
இருந்த பணக் கற்றைகள் எல்லாம் கொண்டு...
என் மேல் பரிவுகள் கொள்ள
சில மனங்களை வாங்க முயற்சித்தேன்........

இருந்த நல்ல மனங்கள் எல்லாம்
விலைக்கு வர மறுத்தன...........
விலைக்கு வந்த கள்ள மனங்களை
எல்லாம் என் மனம் வாங்க மறுத்தது...........

போதி மரத்து கௌதமனாய்
சில உண்மைகள்
நிச்சயமாய் எனக்கு புரிந்து போயிற்று......

நேசங்கள் இன்னும் மலிந்து விடவில்லை
இந்த உலகத்தில்..........
எத்தனை பணங்கள் இருந்தாலும்
நேசங்கள் இங்கு விற்பனைக்கில்லை என்பது.......

கண்கள் திறந்த பொழுது.......
தூரத்தில் ஒலித்தது
அம்மாவின் குரல்..........
".தூங்காம.....காப்பி குடிச்சிட்டு ...,படிடா கண்ணா..."

இர.குமார்.

படித்து ரசித்தவை

யாழ்...

நிலவின் ஒளியில்
தென்னம்கட்டிலின் மடியில்
யாழ் கடற்கரையில்
கொஞ்சும் தமிழ் மொழியில்

எப்போழுது
எங்கள் குழந்தைகள்
குறளை கேட்டு தூங்குமோ...

அப்பொழுது
வெடிகுண்டு சத்தமில்லா
மனிதம் வளர்ப்போம்!!!

வாழ்க்கை வட்டம்!!

வாழ்க்கை தெரிந்தது ஓர் வட்டமாய்!
அதில் சதுரங்கம் ஆட நினைத்தேன்!!
சிற்சில கருப்பு வெள்ளைச் சதுரங்களால்
என் வாழ்வில் எத்தனை எத்தனை
இழப்புகளின் தொடக்கங்களும்
இன்பங்களின் முடிவுகளும்!!

இப்போது நினைக்கிறேன்!
வாழ்க்கை வட்டமாகவே இருந்திருக்கலாம்,
என்னைப் போல‌
ஆதியும் அந்தமும் இல்லாமல்!!

Wednesday, July 16, 2008

நண்பர்கள்.........

இந்த உலகத்தில் யாரும்
யாருக்கும் எதிரிகள் இல்லை!!
அனைவரும் சந்தித்துக்
கொள்ளாத நண்பர்களே!!

..............................

மலைகளின் உச்சிகளுக்கு
செல்லவேண்டியிருக்கின்றது
நண்பர்களைத்தேடி.
அவர்களை இழக்கின்றபோது
மலைகளையே சுமக்கவேண்டியிருக்கின்றது.

அவனிடமே சொல்

எவன் சொன்னவன்
காதல்
இளசுகள் சம்பந்தப்பட்டதென்று
அவனிடமே
சொல்
சொல்
காதல்
இதயங்கள் சம்பந்தப்பட்டதென்று

இவன்.......

இவன் எதிர்ப்புகளை எதிர்கொண்டவன்....
"பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச்சங்கீதமில்லை" என புரிந்தவன்...

இவன் துயரங்களை ஜீரணித்தவன்...
"வெயிலை ஜீரணிப்பதால்தான் மரங்கள்
நிழல் தருகின்றன" என புதுமொழி கூறியவன்...

மற்றவரின் உதட்டசைவிற்கும் உள்ளத்தசைவிற்கும்
பொருள் புரிந்தவன்...

வார்த்தைகளினாலேயே வசியப்படுத்தும்
வசியக்காரன்...

இவனும் ஒரு தேசிங்கு ராஜன்...
மனம் என்னும் மாய பஞ்சகல்யாணி குதிரையை
அடக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால்...

உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்
தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவன்...

சிறகுகள் அடித்து பறவைகள் செத்துப் போவதில்லை...
இவனிடம் நட்பு கொண்ட எவரும் வீழ்ந்து போவதில்லை...

அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை...

இவனிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை...
அறிவு மட்டும் கொண்ட ஆண்கள்
உலர்ந்த பனையோலையில் எழுதிய கவிதைகள்...

அழகு மட்டும் கொண்ட ஆண்கள்
நிறம் மணமில்லா மலர்கள்..................

இவன் மட்டும்தான்
"அழகிய மலரில் எழுதிய கவிதை..."

ஆம்...!!! இவன் மலரில் எழுதிய கவிதை...!!!

பாட்டியின் கதை

பாட்டியின் கதை
கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்

விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்

காத்திருக்கிறேன்...

காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
நான் காத்திருக்கிறேன்...
....
கரைந்து போகும் மணித்துளிகள்...
என் மேல் விழும் பனித்துளிகள்...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
.....
உறங்கும் சூரியன்...
ஒளிரும் சந்திரன்...
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...
எல்லாவற்றையும் கண்டுகொண்டு...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...

.....

கையில் காசில்லை...
நீ வரவேண்டும்...
காசோடு வரவேண்டும்...
நீ தர வேண்டும்...
டீக்கடை, ஓட்டல், பெட்டிக்கடை கடன் அடைக்க...
நான் காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என...

நல்ல காதலி

கோட்டைத் தாண்டாதிருப்பவள்

நல்ல

மனைவியாக வாழலாம்

கோடுகளைத்தாண்ட

மறுப்பவள்

நல்ல

காதலியாக முடியாது

என்றும்

புன்முறுவல்

இதுவரை ஈட்டியது
மரணமே யென
உதடுகள் உணர்ந்த நொடியில்
பிரிக்க இயலா
மென்மையில் இறுகி
ஆனந்த சாந்தமுடன்
ஒட்டிக் கொண்டதொரு
மனம் மறைந்த
புன் முறுவல்

புன்முறுவலை புதைக்கவோ எரிக்கவோ முடியாது.

என் உடல் மலர் உதிர்ந்து
நறுமணமென பிரிந்த உயிர்
காற்றில் கரைந்த பின்னும்
வெட்ட வெளியில் ஒளிரும்
அந்த புன் முறுவல்
மகனே நானுனக்கு விட்டுச் செல்வது
புன்முறுவலை மட்டுமே

பெண்

பெண்களின் கூட்டத்தைக் கண்டு
பித்தன்
விலகி ஓடினான்.

' நீ பெண்களை வெறுப்பவனா ? '
என்று கேட்டேன்.

' இல்லை; அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கிறேன்;
பெண்
தூரத்தில் தான்
அழகாயிருக்கிறாள் ' என்றான்.


அவன் மேலும் சொன்னான்;

சொர்க்கத்தையும்
நரகத்தையும்
பூமியிலேயே நாம்
சுவைத்துப் பார்க்கவே
இறைவன்
பெண்ணைப் படைத்தான்.

நாம்
அவள் வழியாகவே
பிரவேசிக்கிறோம்
அவள் வழியாகத் தான்
வெளியேறவும் வேண்டும்.

அவள்
பொருள் புரியாத
கவிதை.
அதனால்தான்
அவள் கவர்ச்சி
மங்குவதில்லை.

அவள் தாயாகிப்
பரிபாவிக்கிறாள்
தாரமாகி
நிக்கிரகம் செய்கிறாள்.

நெருப்புக் கண்ணாடியில்
பிரதிபலிக்கும்
நம் விரோத பிம்பம்
அவள்.

நம்மை
வசீகரித்து
நம் சிறகுகளை எரிக்கும்
விளக்கு அவள்.

அழகான ஆயுதங்களால்
நம்மைத் தாக்கி
விளையாடும்
பிரியமான எதிரி
அவள்.

நம்மை
இரையாகப் பிடித்துண்ண
இருட்டு மூலைகளில்
அவள்
வலை பின்னுகிறாள்.

நம்மை
விழுங்குவதும்
உமிழ்வதுமாக
அவள்
சலிக்காமல் விளையாடுகிறாள்.

அவள் ஆகர்ஷணத்தின்
அடிமைகளாகி
அவளையே
சுற்றிச் சுழலும்
பரிதாபமான
கிரகங்கள் நாம்.

சிங்களத் தீவினுக்கோர்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளiல் பயிர் செய்குவோம் ....


- பாரதியார்.

புரட்சிச் சுவடுகள்

பின் விளைவுகளைச்
சிந்திப்பதென்பது உயிரின்
எல்லையோடு நின்றிருந்தால்
நாங்களும்
பின்வாங்கி இருப்போம் தான்..

ஆனால் எங்களின் பயணமோ…
தலைமுறை வீதிகளில்
நிகழ்காலத்தைய பிரச்சினைகளை
விமர்சித்தபடி தொடர இருக்கிற
தத்துவப் பயணம்..

காலவெளிச் சாலையின்
கடைசீ
எல்லைவரை எங்களின்
புரட்சிச் சுவடுகள்
புதிதாய் புதிதாய்
புதிது புதிதாய்
மேலே மேலே…

—-அறிவும‌தி—-

நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி அவருடைய ஒரு கவிதை

யாரிடம் போய்ச்சொல்லி அழ

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலம்பெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப் போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப் போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

Monday, June 9, 2008

தத்துவக் கோழி

எங்கள் வீட்டு
வான்கோழி
பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
கடைசி வரைபறக்கவுமில்லை!

குற்றவாளி


அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!

அன்பின் நீரூற்றுகள்
மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து
மட்டுமே பீறிடுகின்றன.

நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்
விழுந்து சுருண்டிருக்கும்
கிழவனைப் புறக்கணித்து

எலக்ரோனிக் அடிமைகளை
ஏற்றிச்செல்கின்றன
சொகுசுப் பேருந்துகள்.


தண்ணீர் தேடியலைகின்றன

கால்களுக்கிடையில் வால்நுழைத்து
எச்சில் இழையொழுகும் நாய்கள்.
எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

கோடை மழை

இரத்தம் உறிஞ்சி
பளபளக்கும் உடலோடு
கழன்றுவிழுகின்றன உறவட்டைகள்...

எழுதுமேசையில்
திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்
முதல்தேதியை முரசறைவித்தபடி...

மண்டைக்குள்
சிலந்திவலை படருமிக்காலம்
வாக்குறுதி மீறுகிறேன்
வாய்திறக்கவியலாத புத்தகங்களே!
மன்னித்துவிடுங்கள்.

கோடை தீங்கங்குகளோடு வருகிறது
அறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்
நீ உவமித்தபடி
ஒரு அகதியின் கழிவிரக்கத்தை நினைவுறுத்திச்
சதா கரைந்துருகும் மின்விசிறி.

வீதியில் இறங்குகிறேன்
மாந்தளிர் விரலசைத்து
சின்னக்குமிழ் வாயால்
எச்சில் நூலிழையசெல்லமே!
நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.

சிரிப்பு

பூ மலர்ந்தால்
பூவுக்கு அழகு
நீ சிரித்தால்
உன்
முகத்திற்கு அழகு!

ஆனால்
நீ ஏன்
சிரிப்பதில்லை!

சிரிப்பும்
சில நேரம்
சீரழித்து விடும்!

நரிகளிடம்
முறைப்பு
நல்லதோர்காப்பு!

ஆன்மாவில்
வெளிப்படும்
அந்த
அழகிய சிரிப்பு
அன்பின் சிகரம்
அதுவே
சொர்க்கதிதின்
வாசல்!

ஆனால்
வியாபார உலகில்
விதவிதமான
சிரிப்புக்கள்!
வேசம் போடும்
முகங்களைப்போல!

அவள் சிரித்தாலும்
அழகுதான்
அதுவே
ஆபத்தாகவும்
முடியும்!

எங்கே
எப்படி
எதற்காக
எந்தக்கோணத்தில்
என்றுஅளந்து
சிரிக்கமுடியவில்லை
என்னால்!

சிரிப்பு
அது
புனிதமானது!

நட்பு...

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்கஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்றஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...

முதிர்ந்த பின்அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ளஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாயநட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்கநட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...

நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்குநட்பாக வேண்டும்

நட்பை தவிர வேறோன்றிமில்லை !

இது ஒரு அழகிய உலகம் ..
இங்குள்ள மலர்கள் அனைத்தும்
புன்னகை பூக்கும் ...
மனம் என்னும் பட்டாம் பூச்சிகள்
ஆனந்ததில் படபடக்கும் ..
பச்சை புல்வெளிகள் அனைத்தும்
பசுமையான நினைவுகள்...
நட்பு என்ற தென்றலால்
சிலு சிலுக்கும் ...
ஆம் இது
"நட்பினால் இணைந்த ஒரு அழகிய உலகம் "...

கடைசி நிமிடங்கள்

எத்தனை கடைசி நிமிடங்கள் நாம் வாழ்வில்

பரீட்சையில் கடைசி நிமிஷத்தில்
ஞாபகம் வரும் விடைகள் ,

சொல்லலாமா வேண்டாமா என்று அலைபாயும் அவன் மனசு
அவள் செல்லும் முன் கடைசி நிமிஷத்தில் சொன்ன காதல் ,

கை ஏந்தும் ஒரு பெரியவருக்காக தேடும் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கடைசி நிமிஷத்தில் தரும் 5 ரூபாய் ,

காலையில் அவசரத்தில் கிளம்பும் போது கடைசி நிமிஷத்தில் வைத்த பொட்டு ,

இது தப்பு அது தப்பு என்று குழந்தையை திட்டிய பின் கடைசி நிமிஷத்தில் குழந்தைக்கு தந்த முத்தம் ,

வாழ்கையில் கடைசி நிமிஷத்தில் புரிய வரும் சில உறவுகள் ,

சில கடைசி நிமிடங்கள் கடைசியாய் போகும் ,

சில கடைசி நிமிடங்கள் புது வாழ்க்கையை தரும்...

Thursday, May 29, 2008

நான் பேசுகிறேன்

1. நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்

இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்

ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்

மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்

பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது

பேசாவிடில்
நான் சாவேன்

*அழகிய பெரியவன் *

நட்பு

1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...


2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.

3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.


4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.


5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.

தெரியுமா

திருப்பதியில் வெங்கடாசலபதி என்ற ஒரு சாமி இருக்கிறது; அதற்கு ஏழுமலையான் என்ற பெயரும் உண்டு. அதன் நெற்றியில் நெடு நாமம் சாத்தப்பட்டு இருக்கும். எத்தனைக் கோடி மக்களுக்கு இந்தக் கல் முதலாளி நாமம் சாத்தியிருந்தால் அந்தக் கோவிலுக்கு ரூ.7,500 கோடி சொத்து சேர்ந்திருக்கும். `இந்தியா டுடே’ இந்தக் கோயிலின் சொத்துக் கணக்கைத் தோராயமாகச் சொல்லியிருக்கிறது.

நிலம் ரூ.15,000 கோடி.
கட்டடங்கள் ரூ.1,500 கோடி.
நகைகள் ரூ.30,000 கோடி.
நிதி ரூ.20,000 கோடி.

கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உண்டியல் வசூலாம். இந்த மாதம் வரை இந்த ஆண்டில் மட்டும் கோயில் வருமானம் ரூ.900 கோடி. லட்டு வியாபாரம் மூலமும் லட்டாய் பணம் குவிகிறது. கொஞ்சம் தான் ரூ.28 கோடி.

பாகப்பிரிவினை

அப்பன் சேர்த்துவைத்திருந்த
அஞ்சரை ஏக்கர் நிலத்தையும்
60 பவுன் நகைகளையும்
கௌரவம் குலையாமல்
பிரித்துக்கொண்ட பிள்ளைகளுக்கு
அம்மாவை என்ன செய்வதென
தெரியவில்லை

குத்திக் காட்டியது - என் தமிழ்

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
‘Sorry ‘ தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
‘Thanks ‘ ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
‘Happy Birthday da’ என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
‘Good Morning Uncle’ என்று …!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
‘Hai’ என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
‘I Love You’ என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
‘அம்மா’ என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்

நட்பின் உன்னதம

புரண்டு புரண்டு
படுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
அட உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாக
புரிந்தது எனக்கு.

தூக்கமே வரவில்லையா?!
உன் நினைவால் தான்
தூக்கம் தொலைந்ததா?!
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
ஒட்டிக்கொண்டதா?!

விடை தேட முயன்றேன்.
விடையாக விரிந்தது மனதில்.

தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
எனக்குத் துணையாக
புகுந்து கொண்டது.

இது தான் நட்பின் உன்னதம்.
இப்படியான ஒரு இன்ப அனுபவத்தை
எத்தனை பேர் உணர்ந்திருப்பர்.!

வணக்கம்

உனக்கென்று என்னிடம் என்ன இருக்கிறது...
இந்த நாளினைத் தவிர.....!
ஒவ்வொரு நாளும்
போராட்டங்கள்.. புதிது புதிதாய்..
வெற்றி தோல்வியாய்..
வடுக்கள்.. மனது முழுக்க..
மறுபடி மறுபடியாய்..
மனிதம் கொண்டு போராட...
என்னோடு சிலர்..
எனக்காக சிலர்..
நம்பிக்கைகளாய்...

நன்றியுடன்.. கட்டியம் சொல்கிறேன்..
காயம் மறந்து..
இன்றுமாய்..